Thursday, February 17, 2011

இளம் வயது இந்தியரை ஈர்க்கும் இணையச் சூழல்


அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று இது குறித்து ஆய்வு நடாத்திய பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் இணைய பயனாளர்கள் எண்ணிக்கை 8.1 கோடியாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டில் 23.7 கோடியாக உயரும் என்று ‘இணையத்தின் புதிய 100 கோடி’ என்று தலைப்பில் ஆய்வு செய்த பாஸ்டன் கன்சல்டிங் குரூப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பிரேசில், இரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.2 பில்லியனாக (1 பில்லியன் = 100 கோடி) உயரும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

“இந்த 4 நாடுகளிலும் இளம் வயதினர் மிக அதிகமாக இணையச் சூழலிற்கு ஈர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

உலக நாடுகளில் தகவல் தொடர்பு அயல் பணிக்கு (Business Process Out-sourcing - BPO) மிகவும் உகந்த நாடாக இந்தியா உள்ளதென, இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட ஏடி கியர்னி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011இல் உலக சேவைகள் இட குறியீடு (Global Services Location Index - GSLI) என்ற ஆய்வை, கணினி அயல் பணி செய்யும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏடி கியர்னி நிறுவனம் நடத்தியுள்ளது. தனது ஆய்வில் கிடைத்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ள ஏடி கியர்னி நிறுவனம், “இந்தியாவே முதன்மை நாடாக உள்ளது. 

அயல் பணித் தேவை எப்படிப்பட்டதாக இருப்பினும் அதற்குரிய பணியாளர் சக்தியை அளிக்கும் நாடாகத் திகழ்கிறது. வேகமான போக்குவரத்து வசதிகள்(!), ஆழமான திறன் உள்ளமை ஆகியவற்றால் உலக அளவில் அளிக்கப்படும் அயல் பணி வாய்ப்புகளை இந்தியா பெறுகிறது” என்று கூறியுள்ளது.

உலக சேவைகள் இடக் குறியீட்டின் படி, இரண்டாவது இடத்திலுள்ள சீனாவை விட 0.5 புள்ளிகள் அதிகம் பெற்றும், மலேசியாவை விட 1 புள்ளி அதிகம் பெற்றும் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்று கூறியுள்ள ஏடி கியர்னி ஆய்வு, இந்தியா முதலிடத்தில் உள்ளதற்குக் காரணம் அதன் ஈடிணையற்ற திறன் கொண்ட பணியாளர்களும், பணியை நிறைவேற்ற ஆகும் குறைந்த செலவும் ஆகும் என்று கூறியுள்ளது.

தகவல் தொழில் நுட்ப அயல் பணியில் உருவாகும் போட்டிகளை சமாளிக்கவும், அதனையும் தாண்டி தன்னை நிரூபிக்கவும், அத்துறையில் புதிதாக எழும் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் திறனும் இந்தியாவை அயல் பணித் துறையில் தலைமையிடத்தையும், மிகச் சிறந்த நாடாகவும் உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளது.

ஆங்கில மொழித் திறன் மட்டுமின்றி, அயல் பணியாற்ற உகந்த திறனைப் பெறக்கூடிய கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தகுதியுடைய பணியாளர்களை உருவாக்குவதும் இந்தியாவை இத்துறையில் தனித்த நாடாக முன்னிறுத்துகிறது என்று கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, தாங்கள் அளிக்கும் சேவையில் தனி முத்திரை பதிக்கும் அளவிற்கு மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் இந்தியாவின் அயல் பணி நிறுவனங்கள் உள்ளதெனவும், அதில் இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியன முன்னணியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

அயல் பணியில் உலகின் முதல் பத்து நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் மலேசியாவும், இந்தோனேஷியா 5வது இடத்திலும், தாய்லாந்து 7வது இடத்திலும் வியட்நாம் 8வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 9வது இடத்திலும் உள்ளன.

கால் செண்டர்களில் சீனா பெரிதாக பங்கு பெறவில்லை என்றாலும், அதிக திறன் தேவைப்படும் பகுப்பாய்வு, உயர் தகவல் தொழில் நுட்பப் பணிகளில் மேற்கத்திய நாடுகளுக்கு அது போட்டியாக வளர்ந்து வருகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

நன்றி-தமிழ் 

1 comment:

  1. நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete