Tuesday, June 27, 2017

எது நம்பிக்கை

*நம்பிக்கை*

எல்லாம் ஒழுங்காக நடக்க,
நீ நம்பிக்கையோடு இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை.

எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும் போதும், நீ
தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

நீ நினைப்பதெல்லாம் உனக்கு
நடக்க நீ பலமாக உணர்ந்தால்
அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உற்றாரும் பிறரும்
உனக்கு உதவி செய்ய,
நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உன்னைக்
கொண்டாட, நீ சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

உன்னுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய, அதிலிருந்து
பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க, நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன்னிடத்தில் எல்லாம் இருக்க,
நீ எதிர்காலத்தைப் பற்றிக்
கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பக்ஷத்தில், நீ எதிர்காலத்தை
நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உனக்கு நம்பிக்கை இருக்கிறதா ???
*நம்பிக்கை இருந்தால் நல்லது*

நன்றி பழனியப்பன்

1 comment:

  1. அருமையான கவிதை. நம்மை தாங்கும் அடி நாதமே நம்பிக்கைதான் அதனை சிறப்பாக வார்த்தைகளில் தந்துள்ளீர்கள். தன்னம்பிக்கை என்ற தலைப்பு பொருத்தமாக இருக்குமோ?

    ReplyDelete